ஆருத்ரா எழுதியவை | மார்ச் 13, 2015

காதல் பிறக்கும் தருணம்.

indian-lady2

நானும் நீயும்
பள்ளிப் பருவத்தில்
இணைந்து படித்ததில்லை.

ஜாடைமாடையாக
பேசிக் கொண்டதில்லை.

யான் நோக்குங்காலை
நிலம் நோக்கி
நாணிக் கொண்டதில்லை.

கண்களால்
பேச்சுப் பரிவர்த்தனை
நடந்ததில்லை.

பெற்றோர்கள்
பேசி வைத்து
நடந்த திருமணம்தான்.

எனினும்……..

அதிகாலை
வேலைக்காக தயாராகையில்
முதல் நாள் இரவே
நீ எடுத்து வைத்த
கனமான காலுறையும்
கழுத்து மப்ளரும்..

உறக்கத்தில் இருந்த
உன்னிடம் பிறந்தது
பரவசக் காதல்.

(13.03.2015)

ஆருத்ரா எழுதியவை | பிப்ரவரி 23, 2014

மூன்று சம்பவங்கள்.

சுப்புவிற்கு  இப்போது  அரைநூற்றாண்டை  கடந்த  வயது. காலங்கள்  நிற்காமல்  கடந்து  போனதில்  ஏற்பட்ட  மாற்றங்கள் முகத்தில்  தெரிந்தன. எப்போதும்  சிரிப்பை  ஏந்திய  முகத்தில்  வயதிற்குரிய  மாறுபாடுகள்  தெரிந்தன. மெலிதான  தாடி ஆங்காங்கே  நரைகூடி  இருந்தது.  இதனை  அனுபவத்தின்  அடையாளம்  என்பதாக  கொள்ள முடியாது. சுப்புவின் வாழ்வில்  அவ்வப்போது  தப்புகளும்  தவறுகளும்  மற்றவர்களைப்  போலவே  ஏற்படச் செய்கின்றன. தவறு  ஏற்படும் தருணங்களில்  சோர்ந்தும், நண்பர்களிடம் புலம்பியும் தான் சுப்பு இதுவரை  காலம்  கழித்திருக்கின்றான். சுப்புவிற்கு எதையும்  மறைத்துப்   பழக்கமில்லை. சொல்ல   வேண்டிய   விடயங்களை  நண்பர்களிடம்  புலம்பித்  தீர்த்திருக்கின்றான்.

eyeglass-lensesசுப்புவிற்கு  கடந்த  காலங்களில்  இரண்டு  வெவ்வேறு சம்பவங்கள்   வெவ்வேறு  காலப்பகுதியில் நிகழ்ந்தன. சம்பவங்கள்  சராசரிதான் எனினும் அவற்றுக்கிடையில்  ஏதாவது  தொடர்பு  உண்டா  என்பது தான்  இப்போது  பெரிய ஆராய்ச்சிக்குரிய  விடயமாகி  உள்ளது.முதலாவது  சம்பவம்  மிக  அண்மையிலும்  மற்றையது  விடுமுறைக்கு  சென்ற  பொழுதில் தாயகத்திலும் இடம்பெற்றவை.

 சுப்புவிற்கு அரைநூற்றாண்டைக் கடந்த வயது என்பதை சொல்லிவிட்ட படியால் வயது உடலில் ஏற்படுத்திய மாற்றங்களில் ஒன்று பார்வைப்புலன் குறைபாடு. அதுவரை தெளிவாக புத்தகங்களை வாசித்த அவனால் இப்போது வாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எல்லாம் கலங்கலாகவும் மங்கலாகவும் தெரிவதாக சொல்லி வருத்தப்பட்டான்.

இப்போதுதான் சின்னப்பிள்ளைகளுக்கே அத்தகைய குறைபாடுகள் இருப்பதாக ஆறுதல் சொன்னாலும் அவனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தனது பாட்டி இப்போதும் கண்ணாடி எதுவும் அணியாமலேயே அவரால் எல்லாவற்றையும் வாசிக்க முடிவதாக சொல்லி வருத்தப்பட்டவன் விடுமுறைக்கு தாயகம் சென்ற பொழுதில் தலைநகரில் தனது கண்களை காண்பித்து அதற்கேற்றவாறு திருத்தமான கண்ணாடி அணிந்து வந்தான்.

prada-parfumsசுப்புவால் இப்போது முன்னைப்போல வாசிக்க முடிந்தது. முன்பைவிட எல்லாம் தெளிவாக தெரிவதாக சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்டான். எனது வீட்டிற்கு வந்தவன் புத்தக அலுமாரியிலிருந்த சில புத்தகங்களை வாசித்துவிட்டு தருவதாக சொல்லி வாங்கிக் கொண்டு போனான். புத்தகங்கள் இரவல் கொடுத்தால் அவற்றை திரும்ப பெற்றுக்கொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது. சரி போய்த்தொலையட்டும் என விட்டுவிட்டேன். ஆதன் பின்னரான இணர்டு வருட காலப்பகுதியில் பல தடவைகள் சந்தித்துக்கொண்டாலும் பல விடயங்கள் பகிர்ந்து கொண்டாலும் எனது சில புத்தகங்கள் அவனிடமே தங்கிவிட்டன.

புத்தகமல்ல  எங்களுடைய  பிரச்சனை.  சுப்புவிற்கு  இரண்டு  வருடங்களின்  பின்னர்  மீண்டும்  பார்வைப்புலன் தெளிவற்றுப்  போனதுதான்  பிரச்சனை. 1.5ற்கு  அப்பால்  பார்வைப்புலன்  நகர்ந்ததுதான்  அவனுடைய  பிரச்சனையே. இனிமேல்  சுவிட்சர்லாந்திலுள்ள  தரமான  கண்ணாடிக்  கடையில்  நல்லதாக  ஒன்று  வாங்க  வேண்டும்  எனவும் சொல்லிக் கொண்டவன் தனது  விடுமுறை  நாளொன்றில்  நேரம்  தீர்மானித்து  மனைவி  பிள்ளைகளுடன்   KOCH  OPTIK  கடைக்கு  விஜயம்  செய்தான். தனக்கு  தோதாக  கண்ணுக்கும்  பழுதின்றி  கண்ணாடி  தெரிவு  செய்வதில்  மிகவும் சிரமப்பட்டு  போனான். கடைக்காரர்  சந்தையில்  பிரபலமான  தயாரிப்பு  நிறுவனங்களின்  கண்ணாடிகளை  அவன் முன் பரப்பி  இருக்கிறார். சுப்பு  பயந்து  போனான்.

 RAY BAN, GUESS, PRADA,  GUCCI, DIOR என பிராண்டட்  கண்ணாடிகள். அவனது  மகளின்  விருப்பத்திற்கு  இணங்க  கண் பரிசோதிக்கப்பட்டு  நல்ல  தரமான  RAY BAN  கண்ணாடி வாங்கி வந்ததாக சொன்னான். கடையில்  வைத்து  போட்டுப் பார்த்த போது  தெரியாத  குறை  எல்லாம் வீட்டில்  போட்டுப்  பார்த்த போது  தெளிவாகத்  தெரிந்தது. உட்கார்ந்த  மேசை சற்று  சரிவாக  இருப்பது  போலவும்  COMPUTER திரை விரிந்த  செவ்வக  வடிவில்  இருப்பது  போலவும்  புத்தகங்களில் எழுத்து  வரிகள்  வளைந்து  காணப்படுவதாகவும்  வருத்தப்பட்டவன்  அடுத்த நாளே  கடைக்குச்  சென்று குறை விளம்பத்த்  தொடங்கினான்.அவனது  குறைகளை  கேட்டுக்கொண்ட  கடைக்காரர்  முன்னர்  அணிந்திருந்த  இலங்கையில்  வாங்கிய  கண்ணாடியில் இல்லாத  ஒரு  சிறப்பு  அம்சம்  இப்பொழுது  வாங்கியதில்  இணைக்கப்பட்டிருப்பதாகவும்  தொடர்ந்த  புத்தக  வாசிப்பில் இக் குறைபாடு  தெளிவாகிவிடும்  எனவும்  கூறி  இருக்கிறார். கண்  கிரகிப்பதை  மூளை  சரியாக  ஏற்றுக்கொள்ள ஒரு வாரம் தேவையாம்.இப்போதும்  எனது  புத்தக  அலுமாரியில்  இரண்டு  புத்தகங்கள்  காணாமல்  போயின. அவை  இனி  திரும்பி வரப் போவதில்லை.

இலங்கையில்  4000  ரூபாவிற்கு  வாங்கிய  கண்ணாடியில்  இருந்த  திருப்தி  இங்கே  60000  ரூபா  பெறுமதியில்  வாங்கிய கண்ணாடியில்  இல்லையே  என  புலம்பிக்  கொண்டு  போனான். எனக்கு TWITER   பார்த்த வாசகம் நினைவுக்கு வந்தது.

“எல்லா  டெஸ்டுகளுக்கும் படிச்சிட்டு போகணும்.ஐ டெஸ்டுக்கு  போய்ப்  படிச்சா போதும்”.

butterfly-effectஇரண்டாவது  சம்பவம்  சுப்பு  எப்போதோ  தாயகம்  சென்று  திரும்பி  என்னை  சந்தித்த  வேளையில்  பகிர்ந்து கொண்டது.  தாயக  உறவுகள்  ஐரோப்பாவில்  இருந்து  உறவினர்கள்  அனுப்பும்  பணத்தில்  தாராள  செலவு  செய்து வீண்  ஆடம்பரமாக  வாழ்வது  பற்றி  புலம்பிக்கொண்டிருப்பான்.” கண் கடை  தெரியுறதில்லை  உவையளுக்கு”  என்பது சாரம்சம்.

 சுப்புவின்  வீடு  கொழும்பின்  புறநகர்ப்பகுதியில்  அமைந்திருந்தது. வெள்ளவத்தையில்  இருந்து  சுப்புவின்  வீட்டிற்கு செல்ல  வேண்டுமானால்  இரண்டு  பஸ்பிடித்து  ஒரு  மணிநேரத்தில்  போய்விடலாம். போக்குவரத்து  நெரிசலில் அகப்பட்டால்  மேலும்  மேலதிக  அரைமணி  நேரம்  செலவாகும். பஸ்  போக்குவரத்து  சுப்புவிற்கு  பிடித்திருந்தது. தாயக  விடுமுறைக்  காலங்களை  அதற்கே  உரிய  நினைவுகளோடும்  நிகழ்வுகளோடும்  கழிக்க வேண்டும்  என்று சொல்லிக்  கொள்வான்.

 அந்தமுறை  சுப்பு  கொழும்பு  சென்ற போது  தமது  உறவினர்  ஒருவரிடம்  கொடுக்கும்படி  சொல்லி  இங்குள்ள ஒருவர் பொதி  ஒன்றைக்  கொடுத்து  தொலைபேசி  இலக்கமும்  கொடுத்திருக்கின்றார். தான்  ஒரு  பொதிகாவியாக மாற்றப்படுவதில்  சுப்புவிற்கு  எப்போதும்  மனவருத்தம்  இருந்தது. பயணம்  புறப்படும்  போதே  ஒவ்வொருவரும் அதைக் கொடுத்து  விடுங்கோ இதைக்  கொடுத்து விடுங்கோ என ஊரான்  வீட்டு  பார்சல்களை  சுமந்து  கொண்டு  செல்ல வேண்டிய  அவலநிலை  வாய்த்து விடுகின்றதே  என்ற கவலை  அவனுக்கு.

 ஊரான் பார்சல்களை ஊட்டி வளர்த்தால்  (தூக்கிச் சுமந்தால்)தன் பொதி  தானே வளர்ந்து விடும் என்ற எனது  மொக்கைப்  பகிடிகள்  அவனுக்கு  பிடிப்பதில்லை. சந்தர்ப்பம்  தெரியாமல்  பகிடி  விடுவதாக  கோபித்துக் கொள்வான்.

 சுப்பு தான்  கொண்டு  சென்ற  பார்சலை  உரியவரிடம்  ஒப்படைப்பதற்காக  தொலைபேசியில்  தொடர்பு  கொண்டால் அவர்  ஒரு  ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை  தினத்தில்  மாலைநேரம்  நான்கு மணிக்கு  வருவதாக  சொல்லி இருக்கின்றார். மாலை  நான்கு  மணிக்கு  வருவதாக  சொன்னவர்  இன்னமும்  வரவில்லையே. வீதி  தெரியாமல் தடுமாறகின்றாரோ  என  நினைத்து  சுப்பு  பலமுறை  தொடர்பு கொண்டால்  பயனில்லை. நேரம்  தவறினால்  சுப்புவிற்கு கேந்தி  வந்து விடும்.மாலை ஆறு  மணியளவில் தான்  வரவேண்டியவர்கள்  வந்து  சேர்ந்தார்கள். வெள்ளவத்தையில்  இருந்து 1200  ரூபா கொடுத்து  ஆட்டோ ஒன்றில்  வந்திருந்தார்கள்.வந்த நண்பர் தான் TRAVEL AGENCY  வைத்திருப்பதாகவும்  தற்போது  பெரிய வருவாய்  இல்லை எனவும்  புலம்பித் தள்ளி  இருக்கின்றார். பேச்சு வாக்கில்  தன்னிடம் ஆட்டோ  இருப்பதாகவும் சொல்லி இருக்கின்றார்.

பெரிய  வருவாய் இல்லை  எனப்புலம்புபவர்  சொந்த ஆட்டோ இருக்கின்றதென  சொல்லிக்கொள்பவர்  ஏன்  1200 ரூபா கொடுத்து  ஆட்டோவில்  வரவேண்டும் என   மனதில் பட்டதை கேட்டால் அந்த நண்பர் சொன்னது “சமூக  STATUS ” என்ற பொருள் பதம்  பற்றி. தனது  ஆட்டோவை  தானே ஓட்டி வந்தால் தன்னுடன்  வியாபார நிமித்தமாக  தொடர்பு கொள்பவர்கள்  யாரும்  பார்க்க நேர்ந்தால்  அடுத்த தடவை  தன்னுடன் தொடர்பு கொள்ளமாட்டார்கள். வியாபாரம்  படுத்து விடும். சமூக  அடையாளம் தரம்  தாழ்ந்து  விடாமல் பேணிக்கொள்வதற்கு இவ்வாறான  நடைமுறைகள் அவசியம்  என்பதாக அமைந்திருந்தது  அவரின் பேச்சு.

 சுப்பு  அவருடன்  ஒன்றும்  கதைக்காமல்  என்னிடம் வந்து  புலம்பினான். பில்கேட்ஸ்  கூட சாப்பிட்டு  முடிந்தவுடன் தனது  தட்டை தானே கழுவி  வைக்கின்றார். இருப்பவர்கள்  நிறைகுடம்; இயல்பாக இருக்கின்றார்கள். இல்லாதவர்கள் குறைகுடம் ; தளம்பிக் கொள்கின்றார்கள்.

buffett-in-Indiaவாரன் பப்பெற் உலகின்  மிகப்பெரும் தனவந்தர். பங்குச்  சந்தையில் முதலீடு  செய்து  பணம் பண்ணுபவர். மற்ற முதலீட்டாளர்கள்  பெரிய பெரிய நிறுவனங்களின்  பங்குகளை  நம்பிக்கையுடன் வாங்கி  வருவாய் தேட முயற்சிக்கையில்  வாரன்  மிகச்சிறிய கொள்விலை  கொண்ட சிறு  நிறுவனங்களின் பங்குகளை  “எதிர்காலத்தில் சிறப்பாக போகும்” என ஆராய்ந்து  முதலீடு  செய்து பெரும்  பணக்காரர் ஆனவர். இவரது  2009  நிதிநிலை 39 மில்லியார்டன்  டொலர்கள். எவ்வளவு பெரிய வீடு,எவ்வளவு வேலைக்காரர்கள் என  எண்ணுவீர்களாயின் அப்படி ஒன்றும் கிடையாது. உலகின்  முதல்  மிக  எளிமையான  பணக்காரர்.

1950 களில் தான் முதல்  முதலாக வாங்கிய 5 அறை அளவு கொண்ட வீட்டில்தான்  இன்று வரை வசித்து வருகின்றார். வேலைக்கென  ஆட்கள்  யாரும் கிடையாது. காலை  உணவை  தானே தயாரித்து கொள்கின்றார். தனது மரணத்தின்  பின் சொத்துக்களின்  99 வீதத்தை  தர்மஸ்தாபனங்களுக்கு  எழுதி வைத்துவிட்டார். (பிறகு என்ன மசிருக்கு இவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்தனீர் என்று மாண்புமிகு வாசகர்கள் கேள்வி கேட்க வேண்டாம்.) அவர்  கூறிய  ஒரு விடயம்  உங்களுக்குப்  பிடித்த பொருட்களை வாங்குங்கள். அவை  பெரிய நிறுவனங்களின் பிராண்ட் தயாரிப்புகளாக இருக்க  வேண்டியதில்லை.பக்கத்து வீட்டு ஆச்சி செய்யும்  பப்படங்களை விட  ஆச்சி மசாலா பப்படங்களும் மசாலாப்பொடிகளும் தான் தமிழர் கரங்களில் தவழ்கின்றன. எங்கும் எதிலும் பிராண்டட் பொடிகள்  பற்பசை,  சோப்புகள், ஸாம்புகள்,    CARE FREE இன்னபிற.

 வாரன் பப்பற் பற்றி  நான் அறிந்து  கொண்டது  சம்பவம்  மூன்று.

 பந்தா  என்ற  சொல்லை  அறிந்திருப்போம்.PHANDHA  என்ற  சொல்லின்  வேர்ச்சொல்  சமஸ்கிருதம்  என்றும்  அதன் பொருள்  வழி, வழிமுறை ,அடம்பவீம்பு  என  அகராதியில்  காணக் கிடைக்கின்றது. நாம்  தற்போது  பந்தா  என்ற சொல்லை  ஆடம்பரம், பகட்டு, அலட்டல்  என்றும்  பொருள்களில்  கையாளுகின்றோம். யாராவது  ஒருவரை  தமது இயல்பிற்கு  மீறி,  இருப்புக்கு மீறி  இயங்கும் போது  அவர்  சரியான பந்தாப்  பேர்வழி  எனக்  குறிப்பிடுகின்றோம்.

சுப்புவிற்கு  நடந்த இரு  சம்பவங்களுக்கும்  நான் புத்தக  வாசிப்பில் அறிந்து கொண்ட மூன்றாவது  நிகழ்விற்கும் ஏதாவது ஒற்றுமை  இருக்கின்றதா?

 2-format3மூன்றையும் பந்தா  என்ற  அடம்பவீம்பு,  சமூகஅடையாளம்  குறித்த பதத்திற்குள்  அடக்கி விடலாம். பிராண்டட் பொருட்களை  வாங்குவது  நுகர்வுக்  கலாச்சாரத்தின் சமூக அடையாளம். தங்கள்  நிலைக்கு ஏற்ப,  இருப்புக்கு ஏற்ப வாழாது பிறரின்  பார்வைக்கு  தன்னைப்பற்றிய நேர்த்தியான அடையாளம்  கொடுப்பதற்காக  வாடகை ஆட்டோவில் வந்ததும்  சமூக  அடையாளம் தான்.

 ஆனால்  எனக்கென்னவோ இந்த  மூன்று நிகழ்வும்  ஒரு பதிவு எழுதுவதற்கு  ஏற்றதாய் அமைந்துவிட்டதையும் அதற்கு  எடுத்துக்காட்டாய்  வண்ணத்துப்பூச்சி  தத்துவத்தையும்  கூறிவிடலாம்.  அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின்  சிறகசைப்பில்  உண்டாகும் காற்று  காலப்போக்கில் பசுபிக்பெருங்கடலில்  புயலாக மாறலாம். இதையே  “BUTTERFLY  EFFECT” எனவும்  கூறுவர். “BUTTERFLY  EFFECT”   புனைவர்களுக்கு அறிவியல் தந்த ஒரு கொடை என்று மேலெழுந்தவாரியான ஒரு குற்றச்சாட்டும் உண்டு.

 அறிவியல்  ஒழுங்கமைப்பின்  உலகு என  மார்தட்டும்  அறிவியலாளர்கள்  ஒழுங்கற்றவைகளை  ஒழுங்குக்குள்  காட்ட முனைந்ததே  “BUTTERFLY  EFFECT”  ன் சாரம்சம். புனைவர்களாகிய எழுத்தாளர்கள்  முடிந்தால்  பயன்படுத்தி கொள்கின்றோம். முடியாவிட்டால்  போட்டுவிட்டு  போகப் போகின்றோம்.

 ஒரு சிறகசைப்பு… மெலிதான காற்று… பந்தா காட்டுவது… BUTTERFLY  EFFECT  .. தூரத்தே காற்று பெரிதாகிக்கொண்டு வருகின்றது. என்ன  நடக்குமோ தெரியாது.

*********************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | பிப்ரவரி 7, 2014

கூழ் குடிக்கலாம் வாங்கோ!

கூழ்கள்  காய்ச்சப்படுவதில்லை;  ஆக்கப்படுகின்றன. பெருங்கவனத்தோடும்  கலைநயத்துடனும்  ஆக்கப்படுகின்றன. கூழ்களுக்கு  தேவையான  பொருட்களை  தெரிவு  செய்து     வாங்குவதிலிருந்து  பெருங்கவனம்  கடைபிடிக்கப்படுகின்றது. சாதாரண  சிறுவிடயம்   தானே  என   அசிரத்தையோடு  தேவையான   பொருட்களை   வாங்கும் போது  கூழின் சுவை   முற்றிலும் மாறுபட்டு   போய்விடுகின்றது.

A.3எங்கள் வீட்டில் கூழ் காய்ச்சப்படுவதற்கு   தேவையானவை என இரண்டு விடயங்களைச்  சொல்லலாம். முதலாவது  எங்கள் வீட்டில் உள்ளவர்கள்  அனைவருக்கும் அன்று லீவாக இருக்கவேண்டும். அடுத்தது எனது  ஒப்புதலுக்கு மனைவி வழி மொழிய  வேண்டும். கடந்த  சனிக்கிழமை , இருவருக்கும்  லீவாக இருந்தது.வழிமொழிவதும் உடன் நடந்தெய்தியது. தமிழர் கடைகள்  செறிந்த  பகுதியில்  இருந்ததால்  அப்போதே  பொருட்களை  வாங்க  முடிந்தது. தமிழர்கள்  தம் வாழ்வில் இருபெரும்   கூழ்கள்   முக்கியத்துவம்  பெறுகின்றன. ஆடிப் பிறப்பன்று ஆக்கப்படும்   ஆடிக்கூழ். அரிசிமா,  பால் கலவையுடன் வறுத்துப்  போடப்படும்  பயறும், இனிப்புக்கு  சர்க்கரையும் ; அது  அதி  அற்புத சுவை. சோமசுந்தரபுலவரினால் பாடப்பட்ட

ஆடிப் பிறப்புக்கு  நாளை  விடுதலை

ஆனந்தம் ஆனந்தம்  தோழர்களே

கூடிப் பனங்கட்டி  கூழும்  குடிக்கலாம்

கொழுக்கட்டை  தின்னலாம்  தோழர்களே.

என்றபாடல் அந்த கூழின் சுவையையும் அதனது  பேரானந்தத்தையும் சொல்லிச் செல்கின்றது.

வழக்கமாக  எப்போதும்  ஆக்கப்படக்  கூடியவை  ஒடியல் கூழ். பெரும்பாலும்  ஒடியல்கூழ்  அசைவ  ஒடியல்கூழாக மாறிவிட்டது. மீன், சிறுநண்டு, இறால், மரவள்ளிகிழங்கு, பலாக்கொட்டை, பயற்றங்காய்,  பொடித்த  மிளகாய்த்தூள், ஒடியல்மா  கரைத்தது  என இதன்  உள்ளடக்கம் அமைகின்றது. மரவள்ளிக்கிழங்கு  மிகக் கவனமாக  பார்த்து வாங்க வேண்டும். நல்ல மாப்பிடிப்பான  மரவள்ளிக் கிழங்கு வாய்த்தால்  அன்றைய கூழின் தகமை அதிஅற்புதம் எனசொல்லலாம். தறுக்கனிச்ச கிழங்கு வாய்த்தால்  கூழ் பாழ் எனலாம். தறுக்கனிச்சகிழங்கு  அவிந்து  கூழுடன் கரைந்து  விடாது  சுவையைக்  கெடுத்துவிடும்.  இந்த வகை ஒடியல்  கூழ்  பெரும்பாலும்  மீன்கூழ் என்று அழைக்கப்படுகின்றது. ஆக்கமுறைகளும்  சேர்மானங்களும்  ஊருக்கு  ஊர்,வீடுகளுக்கு வீடுகள் மாறுபடும். சில  வீடுகளில் முருக்கம் இலை,  அரிசி, பலாச்சுளை  சேர்த்துக்  கொள்வார்கள்.

meeஎல்லா  உணவுகளுக்கும்  ஆதிச்சுவை  என்று  ஒன்றிருக்கின்றது. உங்கள் வீடுகளில் தொன்று தொட்டு  உங்கள் அம்மாவினால் பாவிக்கப்படும் செய்முறை, உப்பின் அளவு எல்லாம் ஆதிச்சுவையை  தீர்மானிக்கின்றன. இந்த  ஆதிச் சுவைக்கப்பால் வேறு  எங்காவது  உணவு அருந்தும் போது அவை  “தூக்கலாக இல்லையே”,”நல்லாயில்லையே”என்று குறைபட்டுக்  கொள்வீர்கள்.

ஒரு விடுமுறைக்கு  இந்தியா  போயிருந்தபோது  எங்கள் உறவினர்  வீட்டில் தங்கியிருந்தோம். தங்கியிருந்த  வீட்டிற்கு  காலை 9  மணிவாக்கில் மீன்காரர்  வருவார். மிகத்தரமான  மீன்கள், நண்டுகள்  வீட்டு  வாசலிலேயே  வாங்கிக்  கொள்ளலாம். மீனையும், சிறுநண்டு, இறால்களை கண்டவுடன்  கூழ்  குடிக்கலாம்  என்ற எண்ணத்துடன்  உறவினர் வீட்டுப் பெண்ணிடம் சொல்லிவிட்டு  பொருட்களை  வாங்கினால் அவர்  தன் கையால் கூழ் வைத்து  தருவதாக  சொல்லிவிட்டார். அம்மாவினால் வைத்து தர முடியாதவாறு  தமது  அன்பினால்  உபசரிக்கவேண்டும்  என்று  நினைத்துக் கொண்டார்  போலும்.

எனக்கு அப்போதே விளங்கிவிட்டது கூழ் பாழாகப் போகின்றது என்று. ஆதிச்சுவைக்கு அப்பால்  போக முடியாத கூழ்களே அருஞ்சுவை கூழ்களாகி விட்டன எனக்கு. அவர் வைத்துத்  தந்த கூழ்  இலைக்கஞ்சி  வகையறாவை ஒத்தது. கூழுக்குள் சோறும், முருக்கம்  இலைகளும்  கிடந்தன. எங்கள் வீட்டுக்  கூழ்களில் இவை இரண்டும்  விலக்கப்பட்டிருக்கும்.

kachai amman.1எனக்கு சென்ற வருடம்  ஜுலையில்  சாவகச்சேரி சென்றிருந்த  போதில் ஆக்கப்பட்ட கூழ் அலாதியானதாக படுகின்றது. நான் மட்டும்  தனியே சென்றிருந்தேன். சாவகச்சேரியில்  இப்போது பெரியளவிலான  நண்பர்கள் வட்டம் இல்லையாயினும்  சித்தியின் மகனும், அவரது  நண்பர் குழாமும்  எனக்கும்  நண்பர்களாகி விட்டார்கள். மீன்கூழ் வைக்கலாம் என்ற பொழுது  கச்சாய் இறங்குதுறையில் நல்ல மீனும், நண்டும் கிடைக்கும் என்றார்கள். அத்துடன் நல்ல பனங்கள்ளும் அங்கே வசிக்கின்ற ஒருவரிடம்  தரமாக  வாங்கலாம்  எனவும் தகவல் தந்தார்கள்.

சாவகச்சேரி  சென்று  தங்கும் நாட்கள் மிகக்  குறைவானபோதும் அந்த நாட்களை  மிகவும் உபயோகமாகவும், களிப்பாகவும் வைத்து  இருக்க வேண்டும் என்று  அடிமனதில்  ஒருஎண்ணம் இழையோடிக் கொண்டிருக்கும்.

கச்சாய்  இறங்குதுறைக்கு  சாவகச்சேரி  கச்சாய் வீதி வழியாகவும் போகலாம்; மீசாலை  அல்லாரை வீதி  வழியாகவும் போகலாம். அல்லாரை  சென்று மீன் பேரம் பேசி வாங்குவதிலும்,  வாயடித்து  கதைப்பதிலும்  – கச்சாய் இறங்குதுறை  சம்பந்தமான  பூரணமான  அறிவு  பெற்றிருந்த  அனுபவம் கொண்டநண்பர் ஒருவரை  இணைத்துக்  கொண்டோம். நேரம் காலை  ஒன்பது  மணியை  நெருங்கிக்  கொண்டிருந்தது. மதியத்திற்கு  அப்பால்  மீன்கள் விற்றுத்தீர்ந்துவிடும். நாங்கள் பிந்திப் போனால் ஒன்றும் கிடைக்காது என  நான் அவசரப்படுத்திக்  கொண்டே இருந்தேன். எங்கள்  வாகனம் அல்லாரை  கொடிகாமம்  தென்னந் தோட்டங்களூடான  வீதியால் விரைந்து கொண்டிருந்தது.

தென்மராட்சியின் பூரண அழகு  தென்னந்தோட்டங்கள்  தான். கொடிகாமம்-  இயக்கச்சி வரை பரந்திருக்கும் தென்னந்தோட்டங்கள் அல்லாரை -கச்சாய் வரை  நீண்டிருக்கின்றன. அவ்வீதியில் அழகான சுற்றுமதில் கொண்ட  வீடுகள் தோட்டங்களுக்கு  நடுவே அமைந்திருந்தன. அவ்இடம் அழகான  சுற்றுலாத்தலம் போல  காலை வேளையில் பிரகாசித்தது.

15_04_09_jaffna_kurunakar_01சற்று நேரத்தில் கச்சாய் இறங்குதுறையை அடைந்திருந்தோம். கச்சாய்  இறங்குதுறையும்,  அது  சார்ந்த‌  பிரதேசமும்  பெருங்கடலை அண்டிய  இடமல்ல. “கடல்நீரேரி ” என்கிறார்கள். உள்முகமாக  நீண்டிருந்த  கடல் நீரேரியில் வரிசையாக மீன்பிடிப் படகுகள்   நிறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவுக்கு  அப்பால் மீன்  பிடிக்கச்  சென்றவர்கள்  கரை  வந்து  வலைகளில்  இருந்து  மீன்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த  இறங்குதுறையில் அரைச்சுவர் கொண்ட மீன் ஏலம் விடும் விற்பனைத்தளம் அமைந்திருந்தது. தாங்கள் அன்று  பிடித்த, வலையில் அகப்பட்டவைகளை ஒரு சேரவைத்து ஏலம் கூறுவார்கள். அதற்குள்  எல்லாவகையான  மீன்களும் கலந்திருக்கும்.

ஒரு  அடிப்படைவிலை  தீர்மானித்து ஏலம் ஆரம்பிப்பார்கள். “ஐநூறாம் ஐநூறாம்” என்று தொடங்கும்  ஏலத்தில் ஒருவர் இடைவெட்டி  50 சொன்னால் ” ஐநூற்றிஐம்பதாம்  ஐநூற்றிஐம்பதாம்”  என அங்கே குரல் தரவல்லாளர் உரக்க கத்த தொடங்குவார்.

எங்களுடன் வந்திருந்த அந்த பிரதேசத்து பரிச்சயமான  நண்பர்  ஏலத்தொகையை  பார்த்து மீன்களை வாங்குவதை தவிர்த்துக் கொண்டிருந்தார். நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு கடுப்பேறதொடங்கியது. இங்கே அவசரப்படக்கூடாது என்பதே நண்பரின் விளக்கமாக இருந்தது. ஏலம் படிந்த பொழுதில் இரண்டாயிரத்து ஐநூறுரூபாவிற்கு  5 கிலோ எடையுள்ள மீன்கள்,  நண்டுகள்,  இறால்கள் என எங்கள் பைகளில் நிறைந்திருந்தன. அந்த நண்பர் வெற்றி கலந்த சிரிப்புடன் “பார்த்தீரா எப்பூடி” என்பது போல் முகக்குறி காட்டினார். தனது வீட்டிற்கென ஒரு பெரிய வாளைமீனை  100 ரூபாவுக்கு வாங்கிக்கொண்டார். இவ்வளவு மீனையும் சாவகச்சேரி மீன் சந்தையில் வாங்குவதானால் 4000 ரூபா  வரும் எனவும்  சொல்லிக்கொண்டார்.

நாங்கள்  இப்போது அல்லாரை  நோக்கி  விரைந்து  கொண்டிருந்தோம். நோர்வேயில் இருந்து விடுமுறைக்காக  வந்திருந்த நண்பர் விடுமுறை பாவிப்பிற்கென வாங்கியிருந்த சிறிய வாகனத்தில் எங்களுக்காக காத்திருந்தார்.

அவருக்குஅவ்விடத்தில் பரிச்சயமான  கள் இறக்குபவர் இருந்ததனால்  கலால் துறையின் கண்காணிப்பை மீறி தரமான கள் கிடைத்தது. சிறிது  வாய்க்குள் விட்டுவிட்டு அவரே  தரச்சான்றிதழ் வழங்கினார்.”சூப்பர் கள்ளுஅண்ணை”. அந்த நோர்வே  நண்பர் பிறப்பில் சைவம். அசைவம் உட்கொள்ளமாட்டாராம். ஆதலால்  மீன்கூழ் தப்பித்தது. எனக்கென்னவோ அவர் சிறிதான முரண்பாட்டு மூட்டையாக‌ காட்சிஅளித்தார்.

kuulஇப்போது வீட்டை அடைந்திருந்தோம். வெயில் வெக்கைகு அப்பால் “கள்” தீர்ந்துகொண்டிருந்தது. நண்பர்கள் இணைந்து வாங்கி வந்திருந்த மீன், நண்டுகளை சுத்தம் செய்து கொடுத்திருந்தோம். வீட்டிலிருந்த பெண்மக்கள் “மீன்கூழ்” ஆக்கி தந்திருந்தனர். மிகத் தரமான கூழ் என்பதற்கு  மூக்கில் பட்டவுடன்  ஒடியல் நெடி ஏற வேண்டும். ஒரு வாய் வைத்தவுடன் எனக்கு கல்லடி வேலுப்பிள்ளையின் கதையும், அந்த கூழும் நினைவிற்குவந்தன.

இரத்தினபுரிக்கு அண்மித்த நிவிற்றிகல என்ற இடத்தில் கல்லடிவேலுப்பிள்ளையின் நண்பரான சுப்பையா வைத்தியராக கடமையாற்றினார். யாழ்ப்பாணத்தில்  இருந்து புறப்பட்ட  வேலர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஒரு மதிய வேளையில் நண்பரின் வீட்டை அடைகின்றார். ஒரு முழுநாளின்  பரிபூரண  அலுப்பு அவர் முகத்தில்  தெரிந்தது.

நண்பரான சுப்பையாவின் மனைவி உடல் அலுப்புக்கு உவப்பானது ஒடியற்கூழ் என தீர்மானித்து  ஒடியற்கூழ் ஆக்கிப் பரிமாறுகின்றார். கூழை உவகையுடன்  உட்கொண்ட கல்லடி வேலுப்பிள்ளை  உடல் அலுப்பு  நீங்கி  மகிழ்ச்சி பரவிய வேளையில் பாடல் பாடத் தொடங்குகின்றார். கல்லடி  வேலுப்பிள்ளை  உட்கொண்ட  கூழ்  மரக்கறி  மட்டுமே  சேர்ந்ததாக காண்பிக்கப்படுகின்றது.

“அல்லையுற்று இரத்தினபுரி அண்டி அப்பாலே நிவிற்றிக்கொல்லை

அடைந்த அலுப்புக் கொண்டதற்கு-கல்லடியான்

வண்டாரும் மாலை அணி மற்புயற் சுப்பையனுடன்

கொண்டாடினான் ஒடியற் கூழ்”

எனக்கென்னவோ பாடத் தோன்றவில்லை. அந்த சுள்ளென்ற மதியமும், அருந்திய கூழும், ஐட்டமும்  என்னை அந்த விறாந்தையில் ஆழ்ந்த நித்திரைக்கு கொண்டு சென்றன.

*****************************************************************************************

ஆருத்ரா எழுதியவை | திசெம்பர் 1, 2013

ஒரு நாளின் மரணம்.

poi

சொல்வதற்கு முடியாததும்
தெரிந்து கொள்வதற்கு
இயலாததுமான காலங்கள்
கடைசியில் கிடைத்தன.

வாழ்த்துக்கள் ‌ பகிரப்படா
பரிசுகள் தரப்படா
பிறந்தநாள் வந்து
விரைகின்றது.

அம்மா மரணித்த துயரம்
இரங்கல் தெரிவிக்காத நாட்கள்
கண்ணீரால் நனைந்து போயிற்று.

பூச்சும் மெழுக்குமான
வார்த்தைச் சரமாடிய
வேடிக்கைப் பொழுதுகள்
கேலியாக நகர்கின்றன.

இதைவிட மோசமான
தருணமொன்று
இனி வந்து வாய்க்கப் போவதில்லை.

நாட்காட்டியில்
இன்றைய நாள்
மாதவிலக்கான நாள்.

நட்பெனப்படுவது யாதெனில்
உயிர்ப்புக்களை
உருக்குலைத்து விடுவது.

வேனிற்காலத்து காலைகளும்
கோடைகாலத்து கொடுமைகளும்
கை கோர்க்க முடியாது
கலைந்து சென்றன.

நடுவழியில் இறங்கி
போக்கிடம் தேடி அலைகின்றது
நமது நட்பெனும் நினைவு.

viruppam irunthal

(01.12.2013)*******************************************************

ஆருத்ரா எழுதியவை | நவம்பர் 2, 2013

விளக்குமாறு .

விளக்குமாற்றிற்கு எதற்கு பட்டுக்குஞ்சம் என்றுசொல்லுவார்கள். ஒரு பொருள் பற்றிய தேவையையும் மதிப்பையும் சார்ந்து அதனை வைத்திருக்க வேண்டிய இடம் பற்றி இந்த பழமொழி சொல்லிச் செல்கின்றது. எங்கள் ஊர்களில் வீடு கூட்டுவதற்கு தும்புக்கட்டையையும் வீடுவளவு கூட்டுவதற்கு விளக்குமாற்றையும் பயன்படுத்துவதற்கு மாறாக இந்தியாவில் வீடுபெருக்குவதற்கு கைவிளக்குமாற்றை பயன்படுத்துவார்கள். கூட்டுவதற்கு பதிலாக பெருக்குதல் நடைபெறும். தமிழர்கள் தமது கணித நிபுணத்துவத்தை இவ்வாறுதான் காட்டிக் கொள்கின்றார்கள்.

inஇவ்வாறு கூட்டிப் பெருக்குவதற்கு ஐரோப்பாவில் விளக்குமாறு தும்புக்கட்டை தவிர்த்து வாக்குவம் கிளினர்கள் என்றழைக்கப்படும் HOOVER கள் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போதைய நிலையில் இதன் மேம்பட்ட பதிப்பாக தானாக தரையில் விரைந்து தன்போக்கில் செயற்படும் ரோபாட் கிளீனர்கள் வந்துவிட்டது. இயக்கிவிட்டால் தானாக சென்று போகக்கூடாத இடங்களுக்குள் சென்று தும்பு ‌ தூசி அனைத்தையும் அகற்றி அழகான வீட்டை உருவாக்குவதாக சொல்லித்தான் இவற்றை விற்பனை செய்கிறார்கள். இவற்றுடன் கூடவே ஈரலிப்பான காற்றையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பகுதிசார் தொழில்நுட்பத்தின் பலாபலன்களை உள்ளடக்கிய வாக்குவம் கிளீனர்கள் இருப்பதாக விற்பனை பிரதிநிதிகள் வீடுகளுக்கு வந்து டெமொ காட்டதயாராக இருக்கின்றார்கள்.

இன்று வாங்கக்கூடிய தகமை கொண்ட நுகர்வோர் உலகம் பல்கிப் பெருகிவிட்டது. அத்தியாவசிய தேவை, அடாவடித் தேவை என்ற மாயமான்களுக்கிடையில் சிக்குப்பட்டு அல்லல்படுகின்றது நுகர்வுக்கலாச்சாரம். தொலைக்காட்சி விளம்பரங்களில் இருந்து சிறு துண்டுப்பிரசுரம் ஊடாக தொலைபேசி அழைப்பு என நீண்டு செல்கின்றது நுகர்வுமானை அடித்துப் போடுவதற்கான உத்திகள்.

விற்பனைப் பிரதிநிதிகள் என்ற பிரிவில் பல்வேறு இன மொழிபேசும் மக்களின் நாடித்துடிப்பறிந்து விற்பனை செய்வதற்கேற்ற வகையில் அவ்வினத்தைச் சார்ந்த அந்தமொழியை சரளமாக பேசக்கூடியவர்களை அப்பணிகளில் அமர்த்தி இருக்கின்றன வெளிநாட்டுநிறுவனங்கள். பெரும்பாலும் தேமதுரத்தமிழ் பேசும் இளம் யுவதிகள் சிலரை வேலைக்கு வைத்திருக்கும் இந்நிறுவனங்கள் அவர்களுக்கு பாட்டில் பாட்டிலாக தேன்களையும் வழங்குகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு. SWEET VOICE அவர்களுக்கு !

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் தொலைபேசி இலக்கங்களை முதலில் தரவுக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் முதற்பணி. பின்னர் ஒருநாளைக்கு இத்தனை தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நிறுவனம் வரையறுத்துக் கொடுப்பதற்கு ஏற்ப அவர்கள் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.

1033_1ஹலோ.. வணக்கம்! உங்களுக்கு நேரம் இருக்கின்றதா? தொடர்ந்து உரையாடலாமா? என்ற தொனியில் ஆரம்பித்து தாங்கள் இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் எனவும் அது பற்றி உரையாட விரும்புவதாகவும் சொல்லி அறிமுகப்படுத்தி உரையாடல்களை தொடர்வார்கள்.

நுகர்வுக் கலாச்சாரம் பற்றியும் உங்கள் தொண்டைக்குள் குத்தப்போகும் தூண்டில்கள் பற்றியும் விழிப்புணர்வான கருத்துகள் உங்களுக்குக்குள் நிறைந்திருந்து- நாளைபார்க்கலாம் அல்லது பின்புபார்க்கலாம் என நாசூக்காகவும் வேண்டாமே என ஒரேயடியாகவும் மறுத்து விடுவீர்களாயின், உங்கள் தாய் தந்தையர் செய்தபுண்ணியம் உங்களுக்கும் வந்திருக்கின்றது நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள் என்பது அர்த்தமாகும். தேன் குரல் நாயகிகளின் வசீகர சுண்டும் குரலுக்கு அடிபணிந்து பேச்சில் குழைவு காட்டினீர்களானால் தொலைந்தீர்கள். பட்டினத்தார் பரதேசம் போக ஆயத்தப்படுத்திய கதையாகி விடும்.

முன்னைய நுகர்வு கலாச்சாரம் குறித்து பார்க்கலாம்.சாவகச்சேரியில் இருந்த வரைக்கும் எங்கள் வீட்டில் விறகு அடுப்புத்தான். ஈரவிறகுடன் அல்லாடும் அம்மாக்களும் பொச்சுமட்டை வைத்து ஊதி ஊதி அல்லாடும் அம்மாக்களும் நினைவுக்கு வருவார்கள். குளிர்பதனப் பெட்டி என்ற ஒரு சமாச்சாரம் அரிதாக சில வீடுகளில் மாத்திரமே காணப்பட்டன. அவற்றை வைத்திருப்பவர்கள் ஊர்களில் வசதியானவார்களாக இருந்தார்கள். வீடுகளில் OVEN களும் மைக்கிரோவேவ் OVEN களும் பின்னாட்களிலேயே புழக்கத்தில் வந்தவை. கேக் தயாரிப்பதற்கு வீடுகளில் எல்லாவற்றையும் தயார்ப்படுத்தி பேக்கரி கொண்டு சென்று போறனைக்குள் வைத்து எடுப்பது அன்றையகாலம்.

manpanaiஆனாலும் நல்ல தண்ணி வீட்டில் இல்லாதவர்கள் மகளிர் கல்லூரியிலும், சாவகச்சேரி சிவன் கோவிலிலும் வெள்ளைகான்களில் நீர் அள்ளி வந்து மண்குடங்களில் ஊற்றி வைத்திருந்து தாகசாந்தி செய்வது நினைவுப் பரிமாணங்கள். அந்த வெக்கைக்கு மண்குடத்தின் ஈரப்பதன் போதுமானதாகவே இருந்தது. மனமும் நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் சிக்குப்படாமல் போதுமென்ற மனம்…பொன்செய்யும் மருந்து.. அமைதியான வாழ்க்கை.

ஐரோப்பாவில் எழுபதுகளில் மைக்ரோவேவ் ஓவன்கள் விற்பனைக்கு வந்த காலத்தில் இருந்து தான் விதவிதமாக பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதும், மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டுவதற்காகவே தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதான நுகர்வுக் கலாச்சாரம் அபரிமிதமாக வளர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். அப்பொழுதெல்லாம் ஐரோப்பிய வீடுகளில் வெவ்வேறு விதமான மூன்று நான்கு மைக்ரோவேவ் சாதனங்கள் சமையலறையை அடைத்துக்கொண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாள் காலை 10 மணி இருக்கலாம். தமிழில் நன்கு உரையாடக்கூடிய அந்ததேன்குரலாள் எங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினாள். ஹலொ நாங்கள் இன்ன நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள். தங்கள் அமெரிக்க நிறுவனம் புதிதாக சந்தைக்கு விட்டிருக்கும் வாக்குவம் கிளீனர் ஒன்றை செயல்முறையில் செயற்படுத்திக் காட்டுவதற்காகவே தொடர்புகொண்டதாக கூறினாள். நீங்கள் எப்பொழுது வீட்டில் இருப்பீர்கள்? நான் எனக்கு கிடைத்துள்ள நாளை மறுநாளின் விடுமுறையை தெரிவித்தேன். அன்று தனியேதான் நிற்பீர்களா? வீட்டில் வேறு யாரும் இருக்கமாட்டார்களா? என்று அடுத்து வந்த கேள்விகளை மாத்திரம் தனியே எனது மனைவி கேட்டிருந்தாளானால் அந்தப்பெண் என்னுடன் வேறு எதற்கோ தொடர்பு கொள்வதாக நினைத்து பெரும் பிரளயம் நிகழ்ந்திருக்கும். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள்? என்றுகேட்டேன்.

அவர்களின் வாக்குவம் கிளீனர் கான DEMO செய்து காட்டும் போது எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டுமாம். ஏலவே நான் இந்த வாக்குவம் கிளீனர் பற்றி அறிந்திருந்ததாலும் எனது நண்பர்கள் இருவர் அதே மாதிரியான பொருள் ஒன்றை பெரும் பெறுமதி கொடுத்து வாங்கி இரண்டு வருடங்களாக உபயோகிக்காமல் பூட்டி வைத்திருப்பதை தெரிந்திருந்ததாலும் எங்களுக்கு வேண்டாம்- பின்பு பார்க்கலாம் எனஅந்தப் பெண்ணிடம் கூறி இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். எனினும் பின்பும் பலமுறை தொடர்பு கொண்டும், இந்த DEMO செய்து காட்டும் போது தாங்கள் அன்பளிப்பாக தரும் கத்திசெற் ஒன்றை பெற்றுக் கொள்ளலாம் என்ற அந்தப் பெண்ணின் ஆசை வார்த்தை எனது மனைவியை கட்டிப்போட்டு விட்டதாலும் ஒருநாள் வீட்டிற்கு வந்து DEMO செய்து காட்டுவதற்கு சம்மதித்தேன்.

பின்பு ஒரு சனிக்கிழமை நான்கு மணிக்கு DEMO ஆரம்பமானது. நன்கு அழகாக உடை தரித்த அந்த தமிழ் இளைஞன் தமிழும் டொச்சும் கலந்து தங்கள் நிறுவனத் தயாரிப்பை வானளாவப் புகழ்ந்தான். இவ்வாறான வேறு தயாரிப்புகள் உலகில் எங்கும் தயாரிக்கப்படவில்லை என்று சத்தியம் செய்தான். தங்கள் நிறுவனத் தயாரிப்பு எங்கள் கைகளில் தவழ்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றான். நன்றாக வார்த்தைகளால் குழை அடிப்பதற்கு கற்றுத் தேர்ந்திருந்தான் என்பது சொல்லாமலே விளங்கிப் போயிற்று.

சாதாரண வாக்குவம் கிளீனர்கள் காற்றை ஒரு பக்கத்தால் இழுத்து மற்றப் பக்கத்தால் வெளியேற்றுகையில் தங்களது தயாரிப்புகள் வெளியேறும் காற்றை நீருக்குள் இழுத்து சுத்தப்படுத்துவதாகவும் அதனால் உங்கள் வீட்டில் இருக்கும் வளியானது மாசுமரு அற்று விளங்கும் – நீங்கள் எல்லோரும் சுகதேகியாகி நூறுவருடங்கள் வரை வாழலாம் என்பதாக அந்த விற்பனைப் பிரதிநிதி சொல்லத் தொடங்கினான். இதைக் கேட்டதும் மைக்கேல் ஜாக்சன் தனது குழந்தையை தூக்கும் போதெல்லாம் தொற்றுநீக்கி உபயோகித்து கைகளை துடைத்த பின்பே தூக்கி முத்தமிட்டதான செய்தி என் நினைவில் வெட்டியது.

fr.1அடுத்து அந்த விற்பனைப் பிரதிநிதி செய்த காரியம் தான் என்னையும் மனைவியையும் அந்த வாக்குவம் கிளீனர் ஐ வாங்குவதற்கான சஞ்சலத்தை ஏற்படுத்தியது. தனது வாக்குவம் கிளீனர் ஐ படுக்கையறை வரை கொண்டு சென்று அங்கு கிடந்த மெத்தை ஒன்றினை செய்முறைக்கு எடுத்துக் கொண்டான். மெத்தையின் ஓரங்களை வாக்குவம் கிளீனரால் சுத்தப்படுத்தி அதன் முனையை திறந்து காட்டி அங்கு தென்பட்ட வெள்ளைமாவு போன்ற பொருளை கையில் எடுத்து இது என்ன தெரியுமா? என்றான். இவைகள் பாக்டீரியாவின் தோல்கள். பாக்டீரீயாக்கள் இறந்ததும் மெத்தைகளில் தங்கிவிட்டன. தான் அதை இப்போது சுத்தப்படுத்தியதாக கூறிக் கொண்டான்.

இவ்வாறான அதகளமான உரையாடல், வசியம், குழையடிப்பு எல்லாமான முடிவில் உலகின் முழுமுதல் தொற்றுநீக்கியான வாக்குவம் கிளீனரை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு நாங்கள் ஆட்பட்டிருந்தோம். சுத்தமான காற்றை சுவாசிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை. அந்த விற்பனை பிரதிநிதி தனது வாக்குவம் கிளீனரை விற்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமாறு கூறியபோதில் எனது மனைவி நாளைக்குப் பார்க்கலாம்- நாங்கள் யோசித்து இறுதி முடிவு எடுப்பதாக கூற விற்பனைப் பிரதிநிதியோ ஒரு கையெழுத்துப் போட்டுவிட்டு பின்பு யோசிக்கலாம் என்ற தோரணையில் கதை பேச தொடங்கினான்.

அந்த விற்பனை பிரதிநிதியான விடாக்கண்டனை எனது மனைவியாகிய கொடாக்கண்டன் வழியனுப்பி வைத்து சுவிஸ் பிராங்கில் 4500 பெறுமதியான செலவுத் தானத்தில் இருந்து என்னை காப்பாற்றிப் பாதுகாத்தாள் என்பதும் பாக்டீரீயாவின் தோல்கள் வளிமண்டலப் பரப்பெல்லாம் வியாபித்து இருக்கின்றது என்பதும் வாசகர்களாகிய உங்களுக்கும் தெரிந்து விட்டு போகட்டுமே.

வாய்ப் பேச்சை நம்பி கைக்காசை இழக்கவேண்டாமே.

**********************************************************************************

 

Older Posts »

பிரிவுகள்